Wednesday 27 December 2017

 கொள்ளுக்குடிபட்டிக்கு மினி டூர்

பறவைகள் கூட்டம் - கண்ணுக்கு அழகு




                      கடந்த  வாரத்தில் ஒரு நாள் நண்பர் ஒருவர் வழியாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பகுதியில் கொள்ளுக்குடிபட்டியில் பறவைகள் வந்துள்ளது தொடர்பாக அறிந்து குடும்பத்துடன் சென்றோம்.காலை 7 மணிக்கு எங்கள் இரு சக்கர வாகனத்தில் காரைக்குடியில் கிளம்பி திருப்பத்தூரில் காலை உணவு சாப்பிட்டு விட்டு சுமார் 8.15 மணி அளவில் கொள்ளுக்குடிபட்டி உள்ளே சென்றோம்.மிக அருமையாக பச்சை பசேல் என்ற மரங்களுடன் நம்மை வரவேற்கிறது அந்த கிராமம்.உள்ளே சில நிமிடங்கள் சென்ற பிறகு  வனத்துறையின் வரவேற்பு பலகைகள் நம்மை வரவேற்கின்றன.என்னவிதமான பறவைகள் இங்கு வரும்,அதன் உருவங்கள் அழகாக வண்ணம் தீட்டப்பட்டு உள்ளன.நாம் அவற்றை பார்த்துக்கொண்டே சென்றோமென்றால் மிக அழகான பறவைகள் நம்மிடமிருந்து சில அடி  தூரத்தில் பல மரக்கிளைகளில் கூட்டம் ,கூட்டமாக அமர்ந்து உள்ளன.
                                     அவை தங்களுக்குள் உணவை ஊட்டிக்கொள்வதும்,தங்களுக்கான கூடுகளை கட்டி கொள்வதும்,கூடுகள் கட்டி கொள்வதற்காக பறந்து,பறந்து சென்று செடிகளையும்,முட்களையும் எடுத்து வருவது அருமையான காட்சியாக இருந்தது.நாங்கள் நின்று இடத்தில் உட்கார்ந்தோம்.அருமையான மர  நிழலில் அமைதியாக அமர்ந்து தண்ணீர் தாண்டி மரக்கிளையில் பறவைகளின் ஒலிகளை கேட்டுக்கொண்டே சில மணி நேரங்கள் அமர்ந்து இயற்கையை ரசித்தோம்.பறவைகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் அதனை ரசித்து கொண்டு இருந்தோம்.
                                         அருகே உள்ள அய்யனார் கோவிலுக்கு முன்பாக உள்ள   வாட்ச் டவரில் மிகவும் சிரமப்பட்டு ஏறி நின்று பறவைகளின் கூட்டத்தையும்,அவை பறந்து எள்ளும் அழகையும் ரசித்தோம்.நாம் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் அங்கு வரும் பறவைகளின் படங்களுடன் முழு விவரங்களையும் அழகாக வனத்துறையினர் எழுதி வைத்து உள்ளனர்.அவற்றை படித்து பார்த்து விட்டு அதன் அருகில் உள்ள வாட்ச் டவரில் ஏறி ( மிக எளிதாக ஏறக்கூடியது ) பறவைகளின் அழகை ரசித்தோம்.அந்த டவரில் இருந்து பார்க்கும்போது அந்த இடம் தண்ணீர் மற்றும் பறவைகளுடன் அழகாக இருந்தது.இன்னும் தண்ணீர் அதிக அளவில் இருந்தால் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் அங்கு அமர்ந்து அதனை கண்டுகளித்தோம்.இங்கு தற்போது பாம்புதாரா, நத்தை கொக்கி நாரை, வொயிட் ஐ பீஸ், மார்கழியன், கருநீல அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள்மூக்கன் உள்ளிட்ட 17 வகையான பறவைகள் இங்கு வந்துள்ளன என்று அங்கு பறவைகளை படம் பிடிக்க வந்த பறவை ஆர்வலர் தெரிவித்தார்.மேலும் அவர் கூறும்போது , முன்பு எல்லாம் அதிகமான மரங்கள் இருந்தன.அதிகமான பறவைகளும் வந்தன.இப்போது மரங்களும் குறித்து விட்டன.பறவைகளின் வருகையும் குறைந்து  விட்டது என்று கூறினார்.நாங்கள் வனத்துறையினைரை தொடர்பு கொண்டு மேலும் தகவல்கள் கேட்கலாம் என்று பல முறை முயற்சி செய்தோம்.ஆனால் அதிகாரி அவர்களையோ ,வேறு அலுவலர்களையோ அங்கு காணவில்லை.அதிகாரி அவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் பல முறை தொடர்பு கொண்டும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார்.நாங்கள் அங்கு இருக்கும்போது வெளிநாட்டினர் சிலர் ஆர்வத்துடன் சுற்றுலா வழிகாட்டியுடன் வந்து பறவைகளை ரசித்து விட்டு சென்றனர்.நாம் இத்துணை ஆண்டு காலம் இந்த பகுதியில் இருந்தும் இதனை பார்க்கவில்லையே என்று நாங்கள் பேசிக்கொண்டோம்.மதுரை செல்லும்போது பலமுறை இந்த இடம் இருப்பதற்கான பலகையை பார்த்துள்ளோம்.ஆனால் உள்ளே சென்று பார்த்தது இல்லை.இன்றுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.
                                           எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால் ,அங்கு செல்லும் பார்வையாளர்கள் பறவைகளுக்கு தொந்தரவு செய்யாமல்,எந்த விதமான ஒலியும் எழுப்பாமல் இருந்தால் நல்லது.மேலும் காலையில் குடும்பத்துடன் கிளம்பி மதிய உணவுடன் சென்றால் அங்கேயே சாப்பிட்டு விட்டு இளைப்பாறி விட்டு,பறவைகளையும் இயற்கையையும் ரசித்து விட்டு மாலை வீடு திரும்பலாம்.மாலை 3 மணிக்கு மேல் அதிகமான பறவைகளை பார்க்கலாம் என்று நமது  நண்பர்கள் சொன்னார்கள்.காலையில் கிளம்பி இரைதேடிவிட்டு மாலை நான்கு மணிக்கெல்லாம் பறவைகள் மீண்டும் அங்கு வந்துவிடுவதாகவும் ,அந்த நேரத்தில் அதிகமான பறவைகளை பார்க்கலாம் என்றும் தெரிவித்தனர்.ஒரு நாள் முழுவதையும் இங்கு நீங்கள் குடும்பத்துடன் செலவழிக்கலாம்.அருமையான இடம்.
                                                      நீங்கள் செல்லும்போது தேவையான உணவு பொருளை உங்கள் கையில் எடுத்து சென்று விடுங்கள்.ஏனெனில் அங்கு உணவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.அங்கு எந்தவிதமான உணவு பொருள்கைளையும் வீசி விட்டு வராதீர்கள்.அங்கு குரங்குகளும் அதிகம் உள்ளன.கவனம் தேவை.அதன் உள்ளே சிறுவர்கள் விளையாடும் வகையில் அழகான பூங்கா உள்ளது.ஆனால் அது பராமரிப்பு இல்லாமல் உள்ளது.ஊர் மக்களும்,வனத்துறையினரும் முயற்சி செய்து அதனை சரி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். 




கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னை இங்கு செல்வதற்கு தூண்டிய பத்திரிக்கை  நண்பர் அனுப்பிய செய்தி இதுதான்.நன்றி 
 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த வேட்டங்குடிபட்டி அருகே கொள்ளுக்குடி பட்டியில் 17 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத் திற்காக இங்கு வருகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த சரணாலயத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வர துவங்கின. பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்,இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் 3ஆயிரம் பறவைகள் தற்போது வந்துள்ளன. இவை செப்டம்பர் முதல் மார்ச் வரை 6மாதங்கள் மட்டுமே தங்கி இனப் பெருக்கம் செய்கின்றன. பாம்புதாரா, நத்தை கொக்கி நாரை, வொயிட் ஐ பீஸ், மார்கழியன், கருநீல அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள்மூக்கன் உள்ளிட்ட 17 வகையான பறவைகள் இங்கு வந்துள்ளன.
பறவைகளை காக்கும் மக்கள்
பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பதில் இக்கிராம மக்கள்தனிக்கவனம் எடுத்து செயல்படு கின்றனர். அதாவது தீபாவளி அன்று வெடி, வெடி வெடித்தால் பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் இக்கிராம மக்கள் தீபாவளி அன்று வெடி வெடிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளனர். அதே போன்று சத்தம் வரக்கூடிய எந்த பழக்கத்தையும் இக்கிராம மக்கள்பின்பற்றுவதை நிறுத்திக் கொண்டு தியாகம் புரிந்துள்ளனர். அதாவது கொட்டுமேளம் அடிப்பதைக்கூட நிறுத்திக் கொண்டுள்ளனர். ஒலிபெருக்கி, மேளதாளங்கள் தவிர்க்கப்படுகிறது. கொள்ளுக்குடிப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கவள்ளி கூறும்போது, தீபாவளிக்கு வேட்டு வெடிக்க முடியவில்லையே என்கிற கவலை எங்கள் ஊர் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் உள்ளது.பறவைகளை நேசிப்பதால் அவற்று க்கு தொந்தரவு செய்யக்கூடாது என்கிற உயர்ந்த நோக்கத்தில் 40ஆண்டுகளுக்கு மேலாக எதற்கும் வெடிவெடிப்பதில்லை என்றார்.



லெ.சொக்கலிங்கம்,
காரைக்குடி.

No comments:

Post a Comment