Tuesday 10 October 2017

 அஞ்சலகத்தில் நேரடியாக பதிவு தபாலை ஸ்கேன் செய்து கற்றுக்கொண்ட மாணவர்கள் 



மாணவர்களே கணினி வழியாக மணியார்டர் அனுப்ப  கற்றுக்கொடுத்த அஞ்சல் அதிகாரி

 அஞ்சலக வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் அஞ்சலகத்திற்கு நேரடி களப்பயணம்



பார்கோடு மூலம்  கணினியில் எவ்வாறு பதிவு செய்தல்? அஞ்சலகத்தில்  மாணவர்களுக்கு நேரடி விளக்கம் 




தேவகோட்டை –அஞ்சல் வாரத்தை முன்னிட்டு அஞ்சல் துறையின் செயல்பாடுகள் ,பயன்பாடுகள் குறித்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  களப்பயணத்தின் வழியாக தேவகோட்டை அரண்மனை அஞ்சல் அலுவலகத்தில் நேரடியாக விளக்கம் அளிக்கப்பட்டது .
                     
                     தேவகோட்டை அரண்மனை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர்.துணை அஞ்சலக அதிகாரி செல்வராஜ் வரவேற்று  அஞ்சலக  துறையின் செயல்பாடுகள் ,பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.அஞ்சலக பணியாளர்கள் மாரிமுத்து,ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் செயல் முறை விளக்கம் அளித்தனர்.
மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் ,ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தனர் .நிறைவாக பள்ளியின் சார்பாக மாணவி காவியா   நன்றி கூறினார். குளுகோஸ் டி , ஸ்கெட்ச் பெண் அடங்கிய ஒரு பாக்கெட்,பிஸ்கட் பாக்கெட்,பேனா என அனைத்தும் அஞ்சல் துறையின் சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் களப்பயணமாக அஞ்சல் அலுவலகம் அழைத்து செல்லப்பட்டு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 பட விளக்கம :தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை அரண்மனை அஞ்சலக  துணை அஞ்சலக அதிகாரி  செல்வராஜ்  அஞ்சலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.






மேலும் கூடுதல் தகவல்கள் :
அஞ்சலக  நடைமுறைகள் எப்படி?
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.
சிவகங்கை மாவட்டம்   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்அஞ்சலக தேசிய வாரவிழாவினை முன்னிட்டு அஞ்சலக  நடைமுறைகள் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றனர்.
   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்க்கு அஞ்சலகம் தொடர்பான நடைமுறைகள் அறிந்து கொள்ள தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஏற்பாடு செய்தார்.
     தேவகோட்டை  அரண்மனை அஞ்சலக துணை அஞ்சலக  அதிகாரி செல்வராஜ்   சம்மதம் தெரிவித்தார்.
மாணவர்கள் பள்ளியிலிருந்து அஞ்சலகத்திற்கு  சுற்றுலாவிற்கு பயணிப்பது போல் உற்சாகத்துடன் அனைவரும் சென்றனர்.அஞ்சலக துணை அதிகாரி செல்வராஜ்  அனைவரையும் வரவேற்றார்.அஞ்சலக பணியாளர்கள் ரமேஷ்,சுரேஷ்,மாரிமுத்து  ஆகியோர் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
அஞ்சலகத்தின்  செயல்பாடுகள் என்ன,என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.
  அஞ்சலகத்தில் பொதுமக்கள் பயன்பாடும்,பொதுமக்களுக்கு அஞ்சலகத்தின்  சேவை குறித்தும் எடுத்து கூறினார்கள் .அஞ்சலகத்தில்  அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே மாணவர்களை அழைத்து சென்று விளக்கம் அளித்தார்.தபால்கள் பிரிப்பது எப்படி? தபால்கள் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு வீடுகளுக்கு சென்றடைவது எப்படி? அஞ்சல் அட்டை, உள்நாட்டு தபால் சேவை, ஒப்புதல் அட்டை, ணி ஆர்டர் படிவம் பூர்த்தி செய்வது எப்படி? பணம் செலுத்தும் படிவம்,பணம் எடுக்கும் படிவம்,ஆகியவை பூர்த்தி செய்வது எப்படி? பதிவு தபால் என்ன  என்பது தொடர்பாகவும்,பதிவு தபாலுக்கும் ,விரைவு தபாலுக்கும் என்ன வேறுபாடு என்பதையும்   விளக்கமாக எடுத்து கூறினார்கள் .
                 அஞ்சலகத்தின் முக்கிய சேவைகளாக உள்ள இ ​- போஸ்ட் ,முக்கிய நகரங்களுக்கு  பொது மக்கள் தங்களது சரக்குகளை குறைந்த விலையில் அனுப்பி வைக்கப்படும் தபால் சேவை, உள்நாட்டில் பண பரிமாற்ற சேவை,வெளிநாடுகளுக்கு தபால்கள்,பார்சல்கள் அனுப்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ள world net express சேவை,Mobile Money System,IMO என பல தகவல்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.மை ஸ்டாம்ப்,பணம் செலுத்தும் கவுன்ட்டர் ,பார்கோடு மூலம்  கணினியில் எவ்வாறு பதிவு செய்தல் என்பதையும்  செயல் விளக்கம் அளித்தனர்.மாணவர்கள் காயத்ரி,நந்தகுமார்,ராஜேஷ்,ரஞ்சித்,உமா மஹேஸ்வரி,சக்தி ஆகியோர் படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.சில மணி நேரங்கள் மாணவ,மாணவியர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் ,ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தனர் .நிறைவாக பள்ளியின் சார்பாக மாணவி காவியா   நன்றி கூறினார்.
மேலும் கூடுதல் தகவல்கள் :
                                    நீங்கள் அஞ்சலகம் சென்ற உடன் பணம் கட்டும் படிவத்தினை எஸ்.பி.103 படிவம் , பணம் எடுக்கும் படிவத்தினை எஸ்.பி.7,கணக்கும் முடிக்கும் படிவத்தினை எஸ்.பி.7A என்றும் பெயர் சொல்லி கேளுங்கள் .உங்களுக்கு அஞ்சலகம் தொடர்பாக தெரியும் என்றும் தெரிவித்தார்.
                       மணி ஆர்டர் அனுப்புவது எப்படி என்பதை விளக்கும் வகையில் பள்ளியில் படிக்கும் பரத்குமார் என்கிற மாணவர்க்கு அவரது வீட்டு முகவரிக்கு ருபாய் பத்துக்கான பணம் அனுப்புவது எப்படி என்பதை கணினி வழியாகவும்,படிவம் பூர்த்தி செய்வது எவ்வாறு என்பது தொடர்பாகவும் நேரடியாக விளக்கி சொன்னார்கள்.நாளை அந்த மாணவருக்கு ருபாய் பத்து கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
                   தபால் நிலையத்தில் இருந்து சரியான பின்கோடு எழுதினால் மறு நாளே தபால் கிடைக்கும் என்றும்,தபால்களை எவ்வாறு அலுவலகத்தில் ஊர் வாரியாக அடுக்கி வைக்கிறார்கள் என்றும் பிரித்து வைத்து காண்பித்தார்.மேலும் ஒவ்வொரு போஸ்ட் மேனும் சரியான வழித்தடத்தில் தான் தினமும் செல்வார்கள் என்றும், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில அவர்களை சென்று அடையலாம் என்றும் தெரிவித்தார்.அதனால்தான் அந்த காலத்தில் மெயில் சென்று விட்டதா என்றும்,போஸ்ட் மேன் சென்று விட்டாரா என்றும் கேட்டு சரியான நேரத்தை அறிந்து கொள்வார்கள்.
                      செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடர்பாக தெளிவாக எடுத்து கூறினார்கள்.பணம் போடுவது கணினி வழியாக  எப்படி என்பதை தெளிவாக விளக்கினார்கள்.
 மாணவர்கள் அஞ்சலகம் சென்றது தொடர்பாக தங்களின் கருத்துக்களை கூறியதாவது ;
  காயத்ரி : நான் இது வரை அஞ்சலகம் வந்தது கிடையாது.இதுவே முதல்முறை .அஞ்சலகம் என்றால் கடிதம் அனுப்புவது மட்டுமே என்று நினைத்து கொண்டு இருந்தேன்.இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது , அஞ்சகலத்தில் இவ்வளவு சேமிப்பு இருக்கிறது என்று தெரியும்.எனது தங்கை மிக சிறிய வயது தான்.வீட்டில் சொல்லி அவரை விரைவில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ப்பேன்.மேலும் நானும் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் கண்டிப்பாக சேருவேன் என்றார்.

  நந்தகுமார் : இதுவரை அஞ்சலகம் வந்தது கிடையாது.இதுவே முதல் முறை.இங்கு உள்ள சேமிப்பு தொடர்பான தகவல்களை நான் அனைவரிடமும் சென்று சொல்வேன்.எங்கள் வீட்டை சுற்றி உள்ள அனைத்து பெற்றோர்களிடமும் சொல்லி அஞ்சலகத்தில் சேமிக்க சொல்வேன்.
தனலெட்சுமி : நான் இங்கு வந்தது எனக்கு புதிய அனுபவம்.இதுவரை அஞ்சலகம் சென்றது கிடையாது.இங்கு படிவங்கள் எப்படி பூர்த்தி செய்வது என்பது தொடர்பாக தெளிவாக எடுத்து சொன்னார்கள்.இது எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

  ராஜேஷ் : நான் இதுவரை அஞ்சலகம் வந்தது கிடையாது.இனி வரும் காலங்களில் நான் எப்போது வந்தாலும் யாருடயை உதவியும் இல்லாமல் நானே படிவங்களை பூர்த்தி செய்வேன்.நன்றாக இன்று எங்களுக்கு தகவல் கொடுத்து கற்று கொடுத்தனர்.அஞ்சலக அலுவலர்களுக்கு நன்றிகள் பல.

  ரஞ்சித் : எங்களுக்கு குளுகோஸ் டி , ஸ்கெட்ச் பெண் அடங்கிய ஒரு பாக்கெட்,பிஸ்கட் பாக்கெட்,பேனா என அனைத்தும் கொடுத்து அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்வது தொடர்பாகவும் விளக்கி கூறினார்கள்.இந்த களபயணம் நல்ல உதவியாக இருந்தது.
ஆசிரியர் ஸ்ரீதர் : நாங்கள் காலையில் வந்தபோது எங்களை அஞ்சலகத்தினர் நன்றாக வரவேற்றனர்.அன்பாக அனைத்து தகவலையும் எடுத்து சொன்னார்கள்.மாணவர்கள் பலமுறை தங்கள் சந்தேகங்களை கேட்ட போதும் மீண்டும்,மீண்டும் தெளிவாக அதனை விளக்கி சொன்னார்கள்.அதிகமான சேமிப்பு திட்டங்கள் தொடர்பாக தெளிவாக தெரிந்து கொண்டோம் என்றார்.

ஆசிரியை முத்து மீனாள் ;  இதுவே முதல் முறையாக  மாணவர்களை அழைத்துகொண்டு அஞ்சலகம் வருவது ஆகும்.  நான் இப்போது வந்தேன்.இது எனக்கு பல புதிய தகவல்களை கற்று கொடுத்தது.பல சேமிப்பு திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டேன்.நல்ல தகவல்களை பொறுமையாக எடுத்து சொன்னார்கள்.அஞ்சலகம் தொடர்பாக பெரும்பாலான தகவல்களை பொறுமையாக எடுத்து கூறியதுடன்,படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பாகவும்,அதில் உள்ள அனைத்து விவரங்கள் தொடர்பாகவும் எடுத்து சொன்னார்கள்.

No comments:

Post a Comment