Friday 29 September 2017

கெட்டி மேளம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து  வீதி உலா வந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியில் புதிய  மாணவர்களை நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் விழா 


 

கெட்டி மேளம்,நாதஸ்வர இசையுடன் பள்ளியில் சேரும் புதிய மாணவர்களை மாலையிட்டு  ஊர்வலமாக அழைத்து வருதல்

கல்விக் கண் திறப்பு விழா




விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை




 

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி புதிய மாணவர்களை மேளம்,நாதஸ்வர இசையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மாணவர் சேர்க்கை கல்வி கண் திறப்பு விழாவாக நடைப் பெற்றது.
        தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும்.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்க வந்திருந்த பெற்றோர்களையும்,மாணவர்களையும் ஆசிரியர்  கருப்பையா   வரவேற்றார்.  இவ்விழாவானது நடராஜபுரம் சின்ன முத்து மாரியம்மன் கோவிலில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளம்,நாதஸ்வர இசையுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ,பெற்றோர்களுடன் பள்ளியை அடைந்தனர்.விழாவிற்கு பள்ளி செயலர் அரு .சோமசுந்தரம் தலைமை தாங்கினர் .தேவகோட்டை  ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் சொக்கலிங்கம்   மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் புதிதாய் சேர்ந்த மாணவர்களை நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து அ ,ஆ சொல்ல வைத்தனர்.ஆசிரியை முத்து லெட்சுமி ,செல்வ  மீனாள் புதிய மாணவர்களுக்கு திருக்குறள் வாசித்து பயற்சி அளித்தார்.மாணவிகள் உமா மஹேஸ்வரி, ஜெனிபர் ,காயத்ரி,சந்தியா ஆகியோர் அபிராமி அந்தாதி சொல்ல வைத்தனர்.குழந்தைகளின் பெற்றோர்கள் திலகவதி,கலைச்செல்வி,சுப்ரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஆசிரியர் செல்வம்  நன்றி கூறினார்.பள்ளி விடுமுறை நாளாக இருந்த போதும் ஆசிரியர்கள் வந்திருந்து மாணவர் சேர்க்கை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் புதிதாய் சேர்ந்த மாணவர்களை நடராஜபுரம் சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து மாலையிட்டு மேளம்,நாதஸ்வர இசையுடன் பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி ஆசிரியைகளால் நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து மாணவர் சேர்க்கை கல்விக் கண் திறப்பு விழாவாக நடைபெற்றது



No comments:

Post a Comment