Wednesday 26 April 2017

  அதிகமான கேள்விகள் கேட்டதற்காக பரிசினை பெற்ற மாணவி பரமேஸ்வரி பிரியா விடை நிகழ்ச்சியில் பேசும்போது ,

நடுநிலைப் பள்ளியில் நிறைவு நாள் விழாவின்போது மாணவர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்கள்



பிரியா விடை நிகழ்ச்சியில் மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தங்களின் எதிர்கால லட்சியம் தொடர்பாக உறுதிமொழி

                 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம்    தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒளி ஏற்றுதல் விழாவில் நடந்த சுவையான அனுபவங்கள் :



 சிறந்த மாணவிக்கான பரிசினை பெற்ற மாணவி தனலெட்சுமி பேசுகையில் பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் சென்னை,மதுரை,திருச்சி என பல ஊர்களிலும் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று 47 சான்றிதழ்களையும் , பல ஆயிரம் ரூபாய் பரிசும் பெற்ற மாணவி தனலெட்சுமி  தனது பல்வேறு போட்டி வெற்றிகளையும்,காவல் நிலையம்,வங்கி ,அஞ்சல் அலுவலகம்,அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் பார்வையிட்டது , தோட்டக்கலை துறை பண்ணைக்கு சென்றது என தனது பல்வேறு அனுபவங்களையும்,தினமலர் ,நியூஸ் 7 சேனல் நடத்திய போட்டி,சுட்டி விகடன் போன்ற பத்திரிகைகளின் வழியாக பல ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றதையும் ,தனது வெற்றிக்கு காரணமான இப்பள்ளியை வாழ்க்கையில் மறக்க முடியாது என்றும்,கண்டிப்பாக ஒரு நாள் இந்திய அரசின் உயர் பதவியான IPS பதவியை தனது லட்சியமாக கொண்டு அடைந்து பள்ளியில் வந்து மாணவர்களிடம் கலந்துரையாடல் செய்வேன் என்றும் உறுதியுடன் சொன்னார்.மேலும் தனது உயர் கல்விக்கு உதவியாக அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ள மதுரை ஜானகி அம்மாளுக்கும் ,முதல் வகுப்பு முதல்  இப்பள்ளியில் படிக்கும் தனக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கும் , தனது தாயார்,தந்தை ஆகியோர் கூலி வேலைசெய்த போதிலும், இதுவரை அருகில் இருக்கும் காரைக்குடிக்குகூட  செல்லாத எனக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு ஊர்களுக்கும் பல முறை செல்லக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி மூன்று வருடங்களில் 47 சான்றிதழ்கள் பெறும் வகையில் அனைத்து போட்டிகளுக்கும் செல்ல வைத்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.தனக்கு கொடுத்த சிறந்த மாணவிக்கான பரிசினை தனது தாயார் கையால் வாங்க செய்து அதனை பெற்றுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சி அங்கு இருந்த அனைவரையும் நெகிழ செய்தது.அவரது பேச்சில் கண்டிப்பாக அவர் தனது இலட்சியத்தை அடைவர் என்பது தெளிவாக தெரிந்தது.அவரது லட்சியம் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோமாக.


அதிகமான கேள்விகள் கேட்டதற்காக பரிசினை பெற்ற மாணவி பரமேஸ்வரி பிரியா விடை நிகழ்ச்சியில் பேசும்போது ,
                      நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இப்பள்ளியில் வந்து சேர்ந்தேன்.அப்போது முதல் பல அறிஞர்கள் ,இந்திய ஆட்சி பணியில் உள்ளவர்கள்,பல துறை வல்லுநர்கள் என அனைவரையும் நான் சந்திக்கும் வாய்ப்பும்,அவர்களுடன் கேள்விகள் கேட்டு பதில்கள் பெறும் வாய்ப்பும் கிடைக்க பெற்றேன்.பள்ளியின் ஆசிரியர்கள்  மற்றும் தலைமை ஆசிரியர் கொடுத்த ஊக்கத்தினால் தினமலர் நாளிதழில் பட்டசபை  போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் தேர்வானதுடன், முதன் முதலாக சென்னை செல்லும் வாய்ப்பும் , மீண்டும் தினமலரில் கனவு ஆசிரியர் போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் தேர்வான ஐந்து பேரில் நடுநிலைப் பள்ளி அளவில் நான் தேர்வாகி எனது கட்டுரை அதனில் வெளியானது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.இந்த பள்ளியில் கேள்விகள் கேட்பதற்கு எனக்கு அதிகமான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தனர்.வருகின்ற அனைத்து அறிஞர்களிடமும் கேள்விகள் கேட்க சொல்லி ஆசிரியர்களும்,தலைமை ஆசிரியரும் என்னை அதிகமான அளவில் ஊக்கப்படுத்தினார்கள்.எனக்கு நல்ல பொது அறிவு வளர்ந்தது.இங்கு வந்தவர்கள் போல் நானும் வாழ்க்கையில் மிக பெரிய ஆளாக மாறி இப்பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் கலந்துரையாட வேண்டும் என்பதே எனது லட்சியமாக வேண்டும்.எனது படமும் ,பெயரும் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியானதை எனது 60,70 வயதுகளில் கூட என்னால் மலரும் நினைவுகளாக பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதை எண்ணி பெருமை கொள்கிறேன்.என்னால் இந்த பள்ளி வாழ்க்கையை மறக்க முடியாது.என்று பேசினார்.

அதிகமான பாடம் சார்ந்த செயல்பாடுகளை செய்து வந்ததற்கான பரிசினை பெற்ற மாணவர் பரத்குமார் பேசும்போது ,
                        எனக்கு இந்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகள் எல்லாமே பிடித்து இருந்தது.ஆரம்பத்தில் சுட்டி விகடன் தொடர்பான சுட்டி கிரியேஷன்ஸ் செய்து பழகி பின்பு பாடம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் எங்கள் வகுப்பு ஆசிரியர் சொன்ன உடனே செய்து கொண்டு வந்து விடுவேன்.பள்ளியின் வழியாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெற்றதை பெருமையாக எண்ணுகின்றேன்.இதே போல் அடுத்து செல்லும் பள்ளியிலும் நான் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று சான்றிதழ்கள் பெறுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பேசினார்.

முத்தழகி ( குடு குடுப்பை பயன்படுத்தி குறி சொல்லும் சமுதாயத்தை சார்ந்த மாணவி ) பேசுகையில் ,
                                         எனக்கு இந்த பள்ளியை விட்டு செல்வது என்பதே வருத்தமாக உள்ளது.நான் வீட்டில் கூட சரியாக சாப்பிட மாட்டேன்.ஆனால்  பள்ளியில் எங்களுக்கு பிடித்த மாதிரி சாப்பாடு செய்கிறார்கள்.எனக்கு அரசின் சத்துணவு நன்றாக பிடித்து இருந்தது.ஆசிரியர்களும்,தலைமை ஆசிரியரும் தினமும் சத்துணவு நன்றாக உள்ளதா என்று கேட்பதுடன் எங்களுடன் சாப்பிட்டும் செல்வார்கள்.நானும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளேன்.நான் வரைந்த ஓவியங்கள் பல்வேறு பத்திரிகைகள் வந்ததுடன் எனது படமும் அவற்றில் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இவ்வாறு பேசினார்.

செந்தில்  ( குடு குடுப்பை பயன்படுத்தி குறி சொல்லும் சமுதாயத்தை சார்ந்த மாணவர்  ) பேசுகையில் ,
                                  எங்களுக்கு தினமும் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் பள்ளியில் பல்வேறு வகையான புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்வார்கள்.அதனில் இருந்து பேச்சு போட்டி,கவிதை போட்டி,கட்டுரை போட்டி,வாசிப்பு போட்டி ,கதை சொல்லுதல் போட்டி என பல்வேறு போட்டிகள் வைத்து அதன் மூலம் பரிசுகள் வாரம் தோறும் தருவார்கள்.இதில் நான் பரிசுகள் பெற்றது எனக்கு மிகுந்த சந்தோசத்தை தந்தது.தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு பேசினார்.


விடா முயற்சி செய்து வெற்றி பெற்ற ராஜேஸ்வரி : நான் இந்த பள்ளியில் முதல் வகுப்பு முதல் படித்து வருகின்றேன்.இப்போது 27 சான்றிதழ்கள் வைத்து உள்ளேன்.என்னுடைய வாழ்க்கையில் பள்ளி சார்பாக பல ஊர்களுக்கு போட்டிகளுக்கும் முதன் முறையாக சென்றது மறக்கமுடியாத அனுபவம் ஆகும்.மதுரை,திருச்சி,சென்னை போன்ற ஊர்களுக்கு இப்போது தான் முதன் முறையாக சென்று உள்ளேன்.6ம் வகுப்பு படிக்கும்போது  சுட்டி ஸ்டார்க்கான போட்டியில் கலந்து கொண்டு தேர்வாகவில்லை.ஆனால் மீண்டும் 7 ம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் விடாமுயற்சி செய்து அதே போட்டியில் கலந்து கொண்டு சென்னை சென்று பயிற்சியில் பங்கேற்றது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் ஆகும்.இந்த அறிய வாய்ப்பினால் தான் நான் இரண்டு முறை முதல் தடவையாக சென்னை செல்லக்கூடிய வாய்ப்பு நன்றாக இருந்தது.சுட்டி விகடன் போட்டியில் தனியார் பள்ளி மாணவர்கள்,பெரு நகரங்களில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பல பேர் இருந்தபோதும்,பள்ளியில் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்து முதல் ஆளாக எழுந்து சென்று பெரிய கூட்டத்தின்முன்பாக பேசினேன்.அதனை கண்ட அனைவரும் என்னை பாராட்டினார்கள்.எனது தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.என் மகள் அனைவரின் முன்பாகவும் நன்றாக பேசினாள் என்று அனைவரிடமும் சென்று கூரி மகிழ்ந்தார்.அதுவே எனக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்தது .இந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்த பள்ளியினை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று பேசினார்.

இது வரை அதிகம் மேடைகளில் பேசாத மாணவி கார்த்திகா : நானும் முதல் வகுப்பு முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறேன்.எனது தாயார் எங்கள் பள்ளியில் சமையல் வேலை பார்த்து வருகிறார்.எனக்கு தந்தை இல்லை.நான் அதிகம் யாரிடமும் பேச மாட்டேன்.ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நானும் இங்கு வந்த அனைவரிடமும் தைரியமாக கேள்விகள் கேட்டதுடன் அவர்கள் பேசியது தொடர்பாக எனது கருத்தினையும் அனைவர் முன்பாகவும் தைரியமாக எடுத்து கூறும் தன்னம்பிக்கை பெற்றுள்ளேன்.அதன் அடிப்படையில் தான் இப்போது இங்கு உங்கள் முன்பு வந்து பேசுகிறேன்.இந்த தைரியம் கிடைத்தது இந்த பள்ளியின் வழியாகத்தான்.நான் இந்த பள்ளியினை வாழ்நாளில் மறக்கமாட்டேன்.இங்கு இருந்து செல்வதே எனக்கு வருத்தமாக உள்ளது.என்று பேசினார்.


மாணவி தனலெட்சுமியின் தாயார் மீனாள்  பேசும்போது : எனது மகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பேரும் ,புகழும் பெற்று சான்றிதழ்களும் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நான் வீட்டு வேலை தான் பார்க்கிறேன்.எனது கணவர் கல் உடைக்கும் வேலைதான் பார்க்கிறார்.எனது மகள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும்.இந்த பள்ளியில் நல்ல உதவிகள் நிறைய  செய்து உள்ளனர்.நானும்,எனது மகளும்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை காரைக்குடியை கூட  தாண்டியது கிடையாது.ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னை வரை சென்று வந்துள்ளேன்.நான் வீட்டு வேலை பார்ப்பதால் என்னால் பல போட்டிகளுக்கு மகளை அழைத்து செல்ல முடியாது.பள்ளி தலைமை ஆசிரியர் ஏற்பாட்டில் ஆசிரியர்கள்தான் அழைத்து செல்வார்கள்.எனது பக்கத்து வீட்டில் உள்ள கமலா என்கிற பெண்ணுக்கு வங்கியில் எப்படி ATM  பயன்படுத்துவது என்று தெரியாது .எனது மகளை வங்கிக்கு அழைத்து சென்று பள்ளியில் பயிற்சி கொடுத்ததில்  இருந்து எனது மகள் பக்கத்து வீட்டு கமலா அக்காவுக்கு கற்று கொடுத்து ATM பயன்படுத்த தெரிந்துகொண்டார்.எனக்கு தெரியாத விஷயம் எனது மகளுக்கு தெரிந்து அதனை சொல்லி கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.பல்வேறு பத்திரிக்கைகளிலும்,சேனல்களிலும் எனது மகளின் படம் மற்றும் செய்தி வந்ததும் மகிழ்ச்சியாக உள்ளது.எந்த விதமான கட்டணமும் இல்லாமல் ,ஆசிரியர்களே பல நேரங்களில் போட்டிகளுக்கு எனது மகளை அவர்களது சொந்த செலவில் அழைத்து சென்றது எனக்கு கிடைத்த பெரிய வரமாகும்.அதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கண் கலங்கினார்.

மாணவி பரமேஸ்வரியின் தந்தை அய்யதேவன் பேசும்போது : எனது மகள் இந்த பள்ளிக்கு வரும்போது ஓரளவு பொது அறிவுடன் வந்து சேர்ந்தார்.ஆனால் இப்போது நன்றாக பேசக் கூடிய நிலையில் உள்ளார்.நல்ல அளவில் பொது அறிவு வளர்ந்துள்ளது.எங்கு வேண்டுமானாலும் தன்னம்பிக்கையுடன் சென்று வந்து விடுவார்.காவல் நிலையம் நான் கூட இது வரை சென்றது கிடையாது.ஆனால் அவள் வயதுக்கு காவல் நிலையம் தொடர்பாக பல தகவல்களை எங்களிடம் வீட்டில் வந்து சொன்னார்.எனக்கு ஆச்சிரியமாக இருந்தது.அது போன்று வங்கி ,கல்லூரி,அஞ்சலகம்,தோட்டக்கலை துறை பண்ணை என அனைத்தும் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் அழைத்து சென்று வந்து உள்ளனர்.பொது அறிவோடு நல்ல கல்வியையும் கொடுக்கும் இந்த பள்ளிக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.

அல்நிஸ்மா என்கிற மாணவியின் தந்தை மாலிக்  பேசும்போது : இந்த பள்ளியில் நான் எனது மகளை 6 ம் வகுப்பில் சேர்த்த போது எழுத ,வாசிக்க தெரியாமல் இருந்தார்.ஆனால் இப்போது நன்றாக எழுதுகிறார்.வாசிக்கிறார் .சத்துணவும் இங்குதான் சாப்பிடுகிறார்.சத்துணவு நன்றாக உள்ளது.பல தருணங்களில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எனது மகளுக்கு பல நன்மைகள் செய்து உள்ளனர்.ரூபெல்லா ஊசி போடும்போது நான் முதலில் மறுத்தேன்.பின்பு தலைமை ஆசிரியர் மற்றும் மருத்துவர் சொன்னதன் அடிப்படையில் ஊசி போட்டு கொண்டு எனது மகள் நன்றாக உள்ளார்.பெண் மருத்துவரை அழைத்து வந்து வருடம் தோறும் வளரிளம்பெண்களுக்கான அறிவுரை கூறுவது பள்ளி வயது பெண்களுக்கு நல்ல ஆலோசனையாக உள்ளது.இது வேறு எங்கும் இப்படி இல்லை.காசு கட்டி படிக்கும் பள்ளியில் கூட இப்படி இல்லை.எந்த விதமான கட்டணமும் இல்லாமல் பல்வேறு வாழ்க்கைக்கு உகந்த கல்வியை சொல்லி தரும் இப்பள்ளியில் எனக்கு தெரிந்த அனைத்து பெற்றோரிடம் சொல்லி சேர்க்க சொல்லுவ வருகின்றேன்.பள்ளிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு பேசினார்.




தலைமை ஆசிரியர் அனைவரின் முன்பாக பேசியதாவது : இந்த ஆண்டு பல்வேறுஆளுமைகள்  பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சென்று உள்ளனர்.அனைவரிடமும் எட்டாம் வகுப்பு மாணவிகள் அதிகமான கேள்விகள் கேட்டு பதில்கள் மற்றும் பரிசுகள் பெற்று உள்ளனர்.கேள்விகள் அதிகமாக கேட்கும்போதுதான் அறிவு அதிகம் வளரும்.அதனை நன்றாக செய்து உள்ளனர்.மேலும் ஆளுமைகள் பேசி முடித்த உடன் அதனை உள்வாங்கி ஒவ்வொரு மாணவரும் நன்றாக அவர்கள் பேசிய கருத்துகளை அப்படியே எடுத்து சொன்னது சிறப்பானது ஆகும்.இதனை பல ஆளுமைகள் பாராட்டி சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் காவல் நிலையம்,வங்கி,அஞ்சலகம்,தோட்ட கலை பண்ணை ,கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றபோதும் அதிகமான கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றது பாராட்டுதலுக்கு உரியது ஆகும்.இந்த மாணவர்கள் இன்னும் அதிகமான வெற்றிகளை அடைய வாழ்த்துவோமாக.எட்டாம் வகுப்பு முடித்து செல்லும் இவர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் பல்வேறு நிகழ்வுகளை வெற்றிகரமாக மாற்றி கொள்ளும் வகையில் பள்ளியில் பயிற்சி அளித்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.எங்களுக்கு எல்லா விதத்திலும் ஊக்கப்படுத்தி வரும் பெற்றோர்களுக்கும்,பள்ளி நிருவாகத்துக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்வதுடன் கட்டணம் எதுவும் இல்லாமல்  கல்வியில் மாணவர்களின் வாழ்க்கையில்  முன்னேற்றம் ஏற்படும் வகையில் பல்வேறு விதமான முயற்சிகளை செய்து வரும் இப்பள்ளியில் மாணவர்ளை சேர்க்க இங்குள்ள பெற்றோரும் அதிக அளவில் மற்ற பெற்றோரிடம் சொல்லி ஆவண செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என்று பேசினார்.



No comments:

Post a Comment