Thursday 23 February 2017

பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கு

பன்றி காய்ச்சலை தடுக்க கைகளை நன்றாக கழுவுங்கள்

தொண்டை வலி,காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் பள்ளிக்கு விடுமுறை எடுத்து கொள்ளுங்கள்.வீட்டிலேயே ஓய்வு எடுங்கள்.

மருத்துவ  துணை இயக்குனர்  அறிவுரை

பன்றி காய்ச்சல் நோய்க்கு தடுப்பூசி உண்டா ? மாணவரின் ருசிகர கேள்வி

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கு
நடைபெற்றது.



                       கருத்தரங்கிற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை வட்டார மருத்தவ அலுலவர் கமலேஸ்வரன்,சுகாதார துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருள் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் வெ.யசோதாமணி பல்வேறு காய்ச்சல் தொடர்பாக மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பேசுகையில் கைகளை நன்றாக கழுவுங்கள்.அப்போதுதான் பன்றி காய்ச்சல் நோய் வராமலும், பரவாமலும்  தடுக்க முடியும். ஏன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்?.கைகள் வழியாகத்தான் நாம் அனைத்து விதமான செயல்களையும் செய்கிறோம்.கைகள் வழியாகத்தான் நம் உடலில் நோய் தொற்று கிருமிகள் செல்கின்றன.கைகளை தான் நாம் அடிக்கடி வாய்,மூக்கு,முகம்,தலை என அனைத்து இடங்களிலும் தொடுகிறோம்.கண்டிப்பாக கைகளை நன்றாக கழுவினால் அனைத்து விதமான நோய்களிலும் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம்.அனைவரும் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்.தொண்டை வலி,காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் பள்ளிக்கு விடுமுறை எடுத்து கொள்ளுங்கள்.வீட்டிலேயே ஓய்வு எடுங்கள்.அரசு மருத்துவமனைக்கு சென்றால் நோய் குணமாக கூடிய மாத்திரைகள் தருவார்கள். உங்களுக்கு இருமல் வந்தால்,உங்களின் அருகில் உள்ளவரிடம் இருந்து  ஒரு மீட்டர் தள்ளி நின்று இருமுங்கள்.அப்போதுதான் அவரையும் நோயில் இருந்து காப்பாற்ற முடியும்.நிலவேம்பு குடிநீர் அனைத்து விதமான காய்ச்சலுக்கும் நல்ல மருந்து.பன்றி காய்ச்சளுக்கு தடுப்பூசி நீண்ட நாட்களுக்கு போட்டு பாதுகாக்கும்  வகையில் கிடையாது.ஏனெனில் இதன் வைரஸ் மாறி கொண்டே இருக்கும்.வருமுன் காப்பதே சிறந்தது.எனவே நோய் வராமல் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.அதற்கு கை கழுவும்
8 முறைகளை பின்பற்றி கை கழுவுங்கள் என்று கூறி அந்த முறைகளை மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் கற்று கொடுத்தார்.கருத்தரங்கில் ஜீவா,தனலெட்சுமி,ஜெகதீஸ்வரன்,ரஞ்சித்,பரமேஸ்வரி,ராகேஷ்,கிஷோர்குமார் உட்பட பல மாணவர்களும்,பெற்றோர்களும் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்களும்,பொது மக்களும் கலந்து கொண்டு பன்றி காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு பெற்றனர்.திருவேகம்பத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கோதண்டராமன்,சுகாதார ஆய்வாளர் முத்துவேல் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் :  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கு
நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் வெ.யசோதாமணி சிறப்புரையாற்றி கை கழுவுதல் தொடர்பாக விளக்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ,சொக்கலிங்கம் உள்ளார்.

No comments:

Post a Comment