Monday 12 September 2016

பள்ளிக்கு தீடீர் விடுமுறை அறிவித்த  மாணவர்


பொய்யானது காட்டுத் தீ போல் , வேகமாக பரவும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். Good experience to all.

 

                   நான்  தலைமை ஆசிரியராக பணியாற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு காலையில் சில பெற்றோர்களிடம் இருந்து தொலை பேசியின் வாயிலாக எனக்கும் ,ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து அழைப்பு வந்தது.சார் இன்று பள்ளிக்கு விடுமுறையா ?  என கேட்டனர்.என்ன விவரம் என கேட்டேன்.சார் இன்று பள்ளிக்கு விடுமுறை என்று ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டு  ஒவ்வொரு மாணவரின் பெயரை சொல்லி பள்ளிக்கு விடுமுறை என்று சொன்னதாக சொல்லி என்னிடம் சில பெற்றோர்  கேட்டனர்.யார் சொன்னார்கள்,பள்ளி திறந்துதானே உள்ளது.எப்படி விடுமுறை சொன்னதாக சொல்கிறீர்கள் , என நான் கேட்டதுடன்  எந்த மாணவர் சொன்னார் என்று சொல்கிறார்களோ அந்த,அந்த மாணவர்களை என்னிடம் பேச சொன்னேன்.அப்போது அவர்கள் ஆளுக்கு ஒரு மாணவரின் பெயரை சொல்லி என்னிடம் சொன்னார்கள்.காலை வேளையில் பள்ளி ஆரம்பமாகும் நேரத்திற்கு முன்பாக இந்த திடீர் விடுமுறை தகவல் சில பெற்றோர்களை மட்டுமே சென்றடைந்துள்ளதை அறிந்தோம்.பள்ளி ஆரம்பமாகும் சில மணி நேரத்திற்கு முன்பாகவே விடுமுறை  இல்லை என வீட்டில் இருந்த அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைத்து விட்டோம்.பள்ளியும் சரியான நேரத்தில் தொடங்கி விட்டது.
                         பிறகு குறிப்பிட்ட பகுதியில் மட்டும்  தீடீர் விடுமுறை பரவியதற்கு எந்த மாணவர் காரணம் என்று மாணவர்களிடம் கேள்விகள் மூலம் கேட்டோம். அப்போது சில மாணவர்களின் பெயர்கள் மீண்டும்,மீண்டும் வந்தது.பிறகு ஒரு கட்டத்தில் ஒரு மாணவர் தான் அனைவரிடமும் விடுமுறை கூறி உள்ளார்.அதுவும் வீட்டில் கிளம்பி பள்ளிக்கு வந்து கொண்டிருந்த மாணவர்களிடமும் , பள்ளிக்கு வருவதற்கு கிளம்பி தயாராகி கொண்டு இருந்த சில மாணவர்களின் வீட்டுக்கும் சென்று இன்று பள்ளிக்கு தீடீர் விடுமுறை என்றதுடன் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்றும் சொல்லி உள்ளார்.அந்த மாணவரை யார் என்று கண்டு பிடித்து ( தொடக்க நிலை மூன்றாம் வகுப்பு மாணவர் ) அவரிடம் அன்புடன் ஏன் இவ்வாறு சொன்னாய்? என கேட்டோம்.அந்த மாணவரின் பதில் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.பதில் இதுதான்.
இன்று காலை எனது அக்கா,தங்கையுடன் பள்ளிக்கு வந்தேன்.எனது அக்கா அவர்களும் ,மற்ற சில மாணவர்களும் சதுரங்க போட்டிக்கு செல்வதற்காக உடற்கல்வி ஆசிரியருடன் வேறு பள்ளிக்கு சென்று விட்டார்.எனது தங்கையும்,நானும் இன்னும் சில மாணவர்களும் பள்ளியின் உள்ளே சென்று   கொண்டு இருந்தோம்.அப்போது எனக்கு ஒரு யோசனை ஏற்பட்டது.பள்ளிக்கு விடுமுறை ,அதுவும் நான்கு நாட்கள் விடுமுறை  என்று என் அருகில் இருந்த முதல் வகுப்பு,இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் சொல்லி விட்டேன்.அதையும் உடற்கல்வி ஆசிரியர் சொன்னார் என்று சொல்லி விட்டேன்.ஏனெனில் உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டு போட்டிக்கு எனது அக்கா அவர்களையும்,வேறு சில மாணவர்களையும் வெள்ளனாகவே வேறு பள்ளிக்கு போட்டிக்காக அழைத்து சென்று விட்டார்.நான் எனது அக்காவுடன் சீக்கிரமாகவே வந்து அவர் அழைத்து செல்வதை பார்த்ததால் அவர் பெயரை சொன்னால் சரியாக இருக்கும்.என உடற்கல்வி ஆசிரியர் பள்ளிக்கு விடுமுறை சொன்னதாகவே அனைவரிடமும் சொல்லி விட்டேன்.நான் இதனை சொல்லி கொண்டே எனது தங்கையும் அழைத்து கொண்டு செல்லும்போது எனது எதிரில் பள்ளிக்கு வந்த சில மாணவர்களிடமும் ,சில மாணவர்களின் வீட்டுக்கு நான்,எனது தங்கை,இன்னொரு அக்கா ஆகியோரிடம் சொல்லி   தனி,தனியாக ஒவ்வொரு வீடாக சென்று பள்ளிக்கு கிளம்பி கொண்டு இருந்த சில மாணவர்களின் பெற்றோரிடமும் பள்ளிக்கு விடுமுறை என சொல்லி விட்டோம்  என்று கூறினார்.என்ன காரணம் என கேட்ட போது , முதல் நாள் ( இந்த நிகழ்வு நடந்ததற்கு முதல் நாள் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி விடுமுறை அதுவும் அந்த நாள் வியாழக்கிழமை ) மறு நாள்தான் வெள்ளிக்கிழமை அன்றுதான் இந்த மாணவர் பள்ளிக்கு தீடீர் விடுமுறை அறிவித்த நாள்.அடுத்த இரண்டு நாட்களும் சனிக்கிழமை,ஞாயிறு என்பதால் தனியார் மெட்ரிகுலேஷன்  பள்ளிகளில் பயிலும்  எங்கள் வீட்டின் அருகில் உள்ள மாணவர்களுக்கு நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் ,  எங்கள் பள்ளியும் நான்கு நாட்கள் விடுமுறை விடக்கூடாது என்று எண்ணினேன்.அவர்கள் விடுமுறையுடன் வீட்டில் இருப்பது போல் நாமும்  வீட்டில் இருக்கலாம் என எண்ணிதான் தீடீர் விடுமுறை அறிவித்தேன்.இனிமேல் இது போல் செய்யமாட்டேன் என்று கூறி வருந்தினார்.இனி வரும் காலங்களில் இது போன்று செய்ய கூடாது  என்று அன்பாக எடுத்து கூறி மாணவரது அறியாமல் செய்த தவறை சரி செய்து கொள்ளுமாறு கூறி அனுப்பினோம்.

        இந்த மாணவர் சொன்ன தீடீர் விடுமுறை  தகவல் அவர்கள் குடியிருப்பு பகுதி முழுவதும் பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்த ,பள்ளிக்கு வந்து கொண்டிருந்த சில மாணவ,மாணவிகளிடமும் உண்மை நிலைமை தெரியாமல் பரவி விட்டது.ஆனால் பெற்றோர்கள் அவர்களே பள்ளிக்கு அழைத்து வந்தும்,தொலை பேசி வழி தகவலை கேட்டும் சரியான நேரத்திற்கு சில மணி துளிகளுக்கு முன்பாகவே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டனர்.
                        மாணவர்களின் மனநிலையை என்ன சொல்வது.தீடீர் விடுமுறை அறிவித்த மாணவரின் தாயார் அவராகவே பள்ளிக்கு விடுமுறை இல்லை என்பதை தெரிந்து கொண்டு ( குறிப்பிட்ட மாணவர்  தான்தான் தீடீர் விடுமுறை சொன்னதாக தன் தாயரிடம் சொல்லாததால் ) மாணவரையும் ,அவரது தங்கையும் அழைத்து வந்தார்.அந்த மாணவரின் தாயார்  இருக்கும்போதுதான் அந்த மாணவரிடம் அன்புடன் இவ்வளவு தகவலையும் கேட்டு பெற்றோம்.பிறகு மாணவரின் தாயார் எங்களிடம் பேசும்போது, தனது மகன் வீட்டை சுற்றிலும்  மாணவர் யாரிடமும்  அதிகம் பழக்கமாட்டார் என்றும் , அதிகமான நேரம் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருப்பதாகவும் கூறியதுடன் இது போன்றுதான் சார் எங்கள் வீட்டிலும் சில நேரங்களில் சில விசயங்களை இம்மாணவர் செய்து விடுகிறார்.இது எங்களுக்கும் சிக்கலாகவே அமைந்து விடுகிறது என்றார்.பிறகு மாணவரின் தாயரிடம் உங்கள் பையனுக்கு நன்றாக  அறிவு வேலை செய்கிறது.ஆனால் அதனை தவறான வழியில் பயன்படுத்தாமல் நல்ல வழியில் பயன்படுத்த அறிவுரை நாங்களும் கூறுகிறோம்.நீங்களும் வீட்டில் நல்ல செய்திகளை கூறி அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து நல்வழிப்படுத்துங்கள் என்று சொல்லி அனுப்பினோம்.அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்குமாறும் கேட்டு கொண்டோம்.மாணவர் தீடீர் விடுமுறை அறிவித்தாலும் சரியான நேரத்தில்  மாணவர்களும் பள்ளிக்கு வந்தது குறிப்பிடவேண்டிய செய்தியாகும்.காலை வழிபாட்டு கூட்டத்தில் மாணவர்கள் அனைவரிடமும் இனி வரும் காலங்களில்  எப்போதும் பள்ளி விடுமுறை என்பதை பள்ளி ஆசிரியர்கள் சொன்னால் மட்டுமே கேட்டு கொள்ள  வேண்டும் என்றும் ,ஆசிரியர் பெயரை சொல்லி யாரேனும் மாணவர்கள் விடுமுறை சொன்னால் அதனை நம்ப வேண்டாம் என்றும் எடுத்து கூறினோம்.
                        ஆசியர்கள் அனைவருக்கும் மாணவரின் செயல்பாடு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் அன்றைய நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.மேலும் சில நாட்கள் கழித்து அம்மாணவரின் தாயார் எங்களிடம் வந்து இப்போது தொலைக்காட்சி பார்ப்பதை  தான் மிகவும்  குறைத்து விட்டதாகவும் , எனவே பையனும் இப்போது முற்றிலும் பார்க்கவில்லை என்றும் கூறி சென்றார்.வீட்டில் நல்ல கருத்துக்களை கூறி மாணவரை நல்வழிநடத்துமாறு கேட்டு கொண்டோம்.

No comments:

Post a Comment