Thursday 30 June 2016

இன்றைய தினகரன் நாளிதழில் கல்வி மலர் இணைப்பில் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் இப் பள்ளி தொடர்பான கட்டுரை வெளி வந்துள்ளது அனைவரும் படியுங்கள் .நன்றி தினகரன் நாளிதழுக்கு.



http://kalvi.dinakaran.com/News/News/1845/Government_aided_school_Running_Creatively.htm

சமூகத்தைப் படிக்கும் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி



6/30/2016 10:25:31 AM
சமூகத்தைப் படிக்கும் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி
ஏசி வகுப்பறை, 100% தேர்ச்சி விகிதம் என்று விளம்பரம் செய்து தனியார் பள்ளிகள் மக்களை மயக்கிக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் சில அரசுப்பள்ளிகள் பெற்றோரை ஈர்த்து, மிகுந்த அக்கறையோடு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படியான ஒரு பள்ளிதான் தேவகோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி. கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். அறிவியல் துறை சார்ந்த வெளி நாட்டவர்கள், மத்திய அரசு விஞ்ஞானிகள், மருத்துவர்கள் பள்ளிக்கு நேரடியாக வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்துச் சென்றுள்ளனர். செயல்வழிக் கல்வியை நூறு சதவீதம் முழுமையாக அமல்படுத்தியுள்ளோம்... என்று தலைமை ஆசிரியர் எல்.சொக்கலிங்கம் மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்குகிறார்.

வாழ்க்கைக் கல்வி, அன்றாட அடிப்படை அறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை மாணவர்களுக்கு நேரடியாகச் சொல்லித் தருவதே எங்கள் நோக்கம். வளர்ந்துவரும் அறிவியல் வளர்ச்சியைப் பார்த்து கிராமப்புற மாணவர்கள் பயப்படக்கூடாது. சில நாட்களுக்கு முன்பு  தேவகோட்டை தலைமைஅஞ்சல் அலுவலகத்துக்கு மாணவர்களைக் களப்பயணமாக அழைத்துச் சென்று தபால் அலுவலக நடைமுறைகள் பற்றி ஒரு நாள் முழுக்க நேரடி விளக்கம் தந்தோம். கட்டமைக்கப்பட்ட தபால்துறை மிஷன் எப்படி இயங்குகிறது என்று மாணவர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டனர் என்கிறார் சொக்கலிங்கம். ஆச்சரியத்துடன் எட்டாம் வகுப்பு படிக்கும் பரமேஸ்வரி என்ற மாணவியிடம் பேச்சு கொடுத்தோம். பாரத ஸ்டேட் வங்கிக்கு எங்களை அழைத்துச் சென்று வங்கி நடைமுறைகள் பற்றிய எல்லா விவரங்களையும் விளக்கினார்கள்.

வங்கி அதிகாரி எங்களுடன் 2 மணி நேரத்துக்கு மேலாகச் செலவிட்டு எங்கள் கேள்விகள் அனைத்திற்கும் விரிவான பதில்கள் தந்தார். வங்கியில் படிவம் இல்லாமல் கிரீன் கார்டு மூலம் பணம் செலுத்துவது எப்படி..? கிரீன் கார்டு என்றால் என்ன? என்று எல்லாமே தெரியும். நீங்க எது கேட்டாலும் இப்ப தெளிவா சொல்லுவேன் என்று வியக்க வைக்கிறார். வேகமாகத் தண்ணீர் குடிக்க ஓடிய இரண்டாம் வகுப்பு படிக்கும் குமாரிடம் பேசினோம். எங்க அம்மாவுக்கு 100 நாள் வேலைத் திட்டத்துல வர பணத்தை ஏ.டி.எம்ல இருந்து எப்படி எடுக்கணும்னு நான்தான் சொல்லித் தந்தேன் சார் என்று மழலைக் குரலில் பேசினான். தொடர்ந்து பேசிய ஆசிரியை  முத்துலெட்சுமி, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பொதுத்திறன்களை அதிகப்படுத்தியுள்ளோம். குறிப்பாகப் பள்ளியில் படிக்கும் வளர் இளம் பெண்கள் சுகாதாரமாக இருப்பது எப்படி என்று விளக்கமளிக்க மாதம் ஒரு முறை மருத்துவர் வருவார்.

மாணவர்களுக்கு உடல்நலப் பரிசோதனையும் நடக்கும். சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுபாஷினி ட்ரம்மர் என்கிற தமிழ்க் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு வாழ்வியல் விழிப்புணர்வுப் பயிற்சி அளித்தார். உலகளவில் வெளிநாடுகளில் உள்ள கல்வி முறை, தொழில்நுட்பங்கள் பற்றித் தெளிவாக விளக்கி இரண்டு நாட்கள் பள்ளியிலேயே தங்கி இருந்து ஜெர்மன் நாட்டுக் கல்வி, கலாசாரம், உணவு, சீதோஷ்ண நிலைகள், வேளாண்மை, கல்லூரிகள், பள்ளிகள் தொடர்பாக மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தெளிவாகப் பதில் சொன்னார்... என்றார். இப்பள்ளியில் திருக்குறள் மற்றும் இலக்கியங்களை மாணவர்கள் யாரும் மனப்பாடம் செய்வதில்லை. இவற்றை மனதில் பதியவைக்க ஆசிரியர்கள் பல புது யுக்திகளைக் கையாளுகின்றனர். பாரதியார் பாடல்கள், புறநானூறு, சிலப் பதிகாரம், அபிராமி அந்தாதி போன்றவற்றை இசையோடு நடனம் மூலம் புதிய முறையில் சொல்லித் தருகிறார்கள்.

வருகிற சிறப்பு விருந்தினர்களிடம் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கூட கேள்விகள் கேட்பதும், பதில் பெறுவதும் வியப்பூட்டுகிறது. குறிப்பாகத் தமிழகப் புள்ளியியல் துறையின் முதன்மைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் பல முறை பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் உரையாடிச் சென்றுள்ளார்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் காயத்ரி டாக்டர் ஆகணும்கிறதுதான் என்னோட கனவு. ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனை செய்ய டாக்டர் அக்கா ஒருத்தவங்க வருவாங்க அவங்ககிட்ட இதயம் எப்படி இயங்குதுனு கேட்டேன். நிறைய சொல்லித் தந்தாங்க. இப்ப இதயம் பத்தி எது கேட்டாலும் சொல்லுவேன். ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் சுகாதாரமும் முக்கியம்னு கத்துக்கிட்டேன் என்கிறார் கல்வி என்பது குழந்தைகளுக்குப் புரிதலையும், நம்பிக்கையையும், சமூகத்தின் மீதான அக்கறையையும் உருவாக்க வேண்டும். அப்படியான கல்வியை, இருண்மை இல்லாமல் குழந்தைகள் விரும்பும் வகையில் வழங்கிவருகிறது சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி..!

- புகழ் திலீபன்

No comments:

Post a Comment