Saturday 30 May 2015

 தேவகோட்டை யில் பள்ளி  மாணவர் சேர்க்கை  விழிப்புணர்வு முகாம்

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


 

           அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்   தங்களது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்ற முனைப்புடன் தற்போதைய கோடை விடுமுறை நாள்களில் கூட கிராமம் கிராமமாக ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க சுற்றி வருவதை காண முடிகிறது. இவர்கள் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மனப்பான்மையை மாற்றி,  அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

                             இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களை சேர்ப்பதில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.   தேவகோட்டை இறகுசேரிப்  பகுதியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர்.கல்வி பயில்தல்,பெண் கல்வியின் அவசியம் குறித்து இன்றைய சூழ்நிலையில் அறிந்திராத இக் குடும்பத்தினருக்கு பள்ளி மாணவிகள் தங்களின் தனிதிறமையினை வெளிப்படுத்தி கல்வியின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.இறகுசேரிப் பகுதிக்கு  ஆசிரியர்கள் ,ஆசிரியைகள்,மாணவ மாணவிகள் புடைசூழ சென்றனர்.பள்ளியில் இருந்து அனைவரும் வருவதறிந்த தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் உற்சாக மிகுதியில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.அந்தபகுதியே திருவிழாக்கோலம் பூண்ட சமுதாய சங்கத்தலைவர் முருகன்  தலைமையேற்றும்,சுப்பையா ,இருளாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் ஸ்ரீதர் பள்ளியின் செயல்பாடுகள்,கல்வியின் அவசியம் குறித்து விளக்கினார்.

                                    ஆண் படித்தால் அந்தப் படிப்பு அவனது குடும்பத்திற்கு மட்டுமே பயன்படும்.ஆனால் பெண்கல்வி கற்றால் உலகத்திற்கே பயன்படும் என்பதை பெண்கல்வியின் அவசியத்தை நாடகம் மூலம் எடுத்துக் காட்டினர். இதில் வாசுகி,முத்துக்குமார் ,வசந்தகுமார்,ரஞ்சித்,பிரவினா,கண்ணதாசன்,ஆகஷ்குமார்,ராஜேஸ்வரி ஆகியோர் நடித்துக் காட்டினார்கள்.                                    
                                       கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் "கல்விக்கண் திறந்தவர்"என்ற தலைப்பில் ஆங்கில  நாடகத்தை மாணவி  மங்கையர்க்கரசி தொகுத்தளிக்க மாணவிகள் முத்தழகி ,தனலெட்சுமி மாணவர்கள் காளியப்பன் ,செந்தில் நடித்துக் காட்டினர் .மாணவர் சேர்க்கையை வலிவுறுத்தி ஆங்கிலத்தில் ஐயப்பன் ,சபரி,கிருத்திகா ஆகியோர் பாடல்கள் பாடினார்கள்.சோலையம்மாள் ,திவ்யா ஆகியோர் கவிதை வசித்தனர்.
                                          ஆசிரியைகள் முத்துமீனாள்,சாந்தி ,செல்வமீனாள் , ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.. சமுதாயத்தலைவர் முருகன் பேசுகையில்,எங்கள் சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொடுத்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்துக்  கொள்கிறோம் .சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நாடகங்களால் எங்கள் பிள்ளைகளயும் கல்வி கற்க வைத்து கலெக்டர் போன்ற பெரிய பதவிகள் வகித்திட எங்களை நாங்கள் தயார் செய்து கொள்வது உறுதி.என்று பேசினார்.நிறைவாக சமுதாயத்தை சேர்ந்த பாண்டியன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment