Saturday 18 October 2014

பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்ற
தமிழ் ஆசிரியர்கள் 6 பேருக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு

பிளஸ் 2 முடிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 தமிழ் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மன், உமா உள்ளிட்ட 6 பேர் 10ம் வகுப்பு முடித்து, ஆசிரியர் பயிற்சி பெற்ற பிறகு ஓவிய ஆசிரியர்களாக கடந்த 1985ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டுக்குள் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். இதன்பிறகு, சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி, பி.லிட். (தமிழ்), பட்டம் பெற்று, பி.எட் பட்டமும் பெற்றனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 1ம் தேதி தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கி 131 பேர் அடங்கிய பெயர் பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. அதில், மனுதாரர்கள் 6 பேரின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையிடம் கேட்டபோது, பிளஸ் 2 முடிக்காமல் பட்டப்படிப்பு பெற்றதால், பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியில்லை என கூறப்பட்டது.
இதை எதிர்த்தும், பதவி உயர்வு வழங்கக் கோரியும் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், �பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வின் விதிப்படி பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு எழுதியே நாங்கள் பட்டம் பெற்றோம். ஆனால், நாங்கள் பிளஸ் 2 படிக்காமல் பட்டம் பெற்றதால் பதவி உயர் பெறுவதற்கு தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள் ளது. எனவே, பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நாங்கள் பெற்ற பட்டம் செல்லும் என அறிவித்து எங்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட வேண்டும்� என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன் அளித்த உத்தரவு வருமாறு:
யுஜிசி விதிப்படி பிளஸ் 2 முடித்து விட்டு பட்டப்படிப்பு சேரலாம். பிளஸ் 2 படிக்காதவர்கள் பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று பட்டம் பயிலலாம். மனுதாரர்கள் இரண்டாவது முறையில் பட்டம் பெற்றுள்ளனர். இதன் பிறகு அவர்கள் பிளஸ் 2விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். யுஜிசி முறைப்படியே இவர்கள் பயின்றுள்ளனர். இவர்களது பட்டங்களை பல்கலைக்கழகங்கள் ஏற்றுள்ளன. எனவே, மனுதாரர்கள் பெற்ற பட்டம் செல்லும். அதனால், மனு தாரர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள். பதவி உயர்வு பெற மனுதாரர்களுக்கு தகுதியில்லை என பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு 8 வாரங்களுக்குள் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment