Friday 30 May 2014

"நெட்' தேர்வில் மாற்றம் கொண்டு வரும் யுஜிசி

பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு
(யுஜிசி) முடிவு செய்துள்ளது.

உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக தகுதித் தேர்வில் மாற்றம் கொண்டுவர யுஜிசி திட்டமிட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்காக ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் 10 கேள்விகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதாவது, உயர் கல்வி ஆசிரியரை அடையாளம் காண "நெட்' தேர்வு போதுமானதாக உள்ளதா, தேர்வில் பங்கேற்க வயது வரம்பு கொண்டுவர வேண்டுமா, இந்தத் தகுதித் தேர்வில் ஒருவர் இத்தனை முறைதான் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமா, தவறான பதில்களுக்கு "நெகட்டிவ்' மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டுமா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கேள்விகளுக்கு தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்குமாறு யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு கேள்விக்கு அருகிலும் ஆம், இல்லை என்ற இரண்டு பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிலில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, சமர்ப்பிப்பு பட்டனை அழுத்தினால் போதும்; கருத்து பதிவு செய்யப்பட்டு விடும்.
இது குறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் கூறியது:
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், "நெட்' தகுதித் தேர்வில் சில மாற்றங்களைக் கொண்டுவர யுஜிசி முடிவு செய்துள்ளது. இதற்காக தனி குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தகுதித் தேர்வில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம் என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிவதற்காக 10 கேள்விகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தக் கருத்துகள் மற்றும் குழு முடிவுகளின் அடிப்படையில், "நெட்' தகுதித் தேர்வில் மாற்றம் கொண்டுவரப்படும்.
இப்போது ஜூன் மாதம் நடைபெற உள்ள "நெட்' தேர்வில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஆனால், டிசம்பரில் நடத்தப்படும் தேர்வில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

இப்போது "நெட்' தகுதித் தேர்வில் "நெகட்டிவ்' மதிப்பெண், வயது வரம்பு ஆகியவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment